இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பரபரப்பு


இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2020 11:11 PM GMT (Updated: 10 May 2020 11:11 PM GMT)

இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக் காமல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி புதுவை மாநிலத்தில் கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணியவேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கடைகள், பால் பூத், வங்கிகள், மருத்துவமனை உள்பட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக கிருமி நாசினியும் வைக்கப்பட்டுள்ளது.

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

இந்தநிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று புதுவையில் உள்ள இறைச்சி கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டு போட்டி போட்டுக் கொண்டு இறைச்சி வாங்குவதிலேயே மக்கள் குறியாக இருந்தனர். குறிப்பாக கடலூர் சாலை, காராமணிக்குப்பம் ரோடு, வில்லியனூர் சாலை, உப்பளம் சாலை உள்பட நகரில் பல்வேறு இடங்களில் இதே நிலை காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பொதுமக்கள் மற்றும் கடைக் காரர்களை எச்சரித்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்கும் வகையில் பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர். அதேபோல் முககவசம் அணிந்து வராதவர்களுக்கு இறைச்சி வழங்க வேண்டாம் என்று கடைக்காரர்களை அறிவுறுத்தினர்.

மீன் விற்ற பெண்கள்

உப்பளம் சாலையில் இருந்து துறைமுகம் செல்லும் வழியில் சாலையோரத்தில் ஏராளமான பெண்கள் மீன் வியாபாரம் செய்தனர். அங்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்றுகூடி மீன்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்களையும், மீனவ பெண்களையும் கடுமையாக எச்சரிக்கை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story