திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள் - அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள் - அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2020 11:15 PM GMT (Updated: 11 May 2020 7:17 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியில் வரும்போது முக கவசங்களை அணிந்து தான் வருகின்றனர். சிலர் தற்காப்புக்காக கையுறைகளும் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கையுறைகளை பொது இடங்களில் வீசக்கூடாது. அதனை முறையாக சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காணும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள், கையுறைகளாக கிடக்கிறது.

இதனால் கொரோனா வைரஸ் நம்மை தொற்றி கொள்ளுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிடக்கும் பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள், கையுறைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story