காவேரிப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலி


காவேரிப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலி
x
தினத்தந்தி 11 May 2020 11:00 PM GMT (Updated: 11 May 2020 9:58 PM GMT)

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நர்சு பலியானார்.

பனப்பாக்கம்,

ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 35), இவரது மனைவி தேன்மொழி (30). இவர் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு டினுயா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தேன்மொழி வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக உறவினர் விஷாலுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதனால் விஷால் மோட்டார்சைக்கிளை நிறுத்தியபோது நிலைதடுமாறி இருவரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story