கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்


கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 May 2020 11:15 PM GMT (Updated: 12 May 2020 9:25 PM GMT)

கூடங்குளம் முதல் அணுஉலையில் நேற்று அதிகாலையில் திடீரென மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஏற்கனவே முதல் அணுஉலையில் கடந்த 30-ந் தேதி பழுது ஏற்பட்டு அது சரி செய்யப்பட்டு மீண்டும் 4-ந் தேதி மின் உற்பத்தி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் முதல் அணுஉலையின் டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பழுதை சரிசெய்யும் பணிகளில் தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்படி மாலை 4.50 மணிக்கு பழுது சரிசெய்யப்பட்டு அணுஉலை செயல்பட தொடங்கியது. தற்போது 230 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை அடையும் என்று அணுமின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2-வது அணு உலையில் தற்போது 910 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்ததக்கது.

Next Story