கஞ்சநாயக்கன்பட்டியில் இசைக்கருவிகளை வாசித்து நிவாரணம் கேட்ட கிராமிய கலைஞர்கள்


கஞ்சநாயக்கன்பட்டியில் இசைக்கருவிகளை வாசித்து நிவாரணம் கேட்ட கிராமிய கலைஞர்கள்
x
தினத்தந்தி 13 May 2020 4:51 AM GMT (Updated: 13 May 2020 4:51 AM GMT)

கஞ்சநாயக்கன்பட்டியில் கிராமிய இசை கலைஞர்கள் இசைக் கருவிகளை வாசித்து தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சேலம்,

ஓமலூர் அருகே காடையாம்பட்டி கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 350 பேர் கிராமிய இசை கலைஞர்களாக உள்ளனர். தற்போது கொரோனா நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், அன்றாட கூலியை நம்பி வாழ்ந்து வந்த இவர்கள், தற்போது உணவுக்கு கூட வழியில்லாமல், கிராமத்தை விட்டு வெளியில் சென்று உதவிகள் கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிராமிய இசை கலைஞர்கள் அனைவரும் ஊர் கோவில் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் நாதஸ்வரம் மற்றும் மேளங்கள், தவில்கள் போன்ற இசைக்கருவிகளை வாசித்து தமிழக அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர். அதாவது, 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து வருவதால் இசை கலைஞர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும், எனவே தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இசை கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்

இது குறித்து அகில இந்திய மனித உரிமை கழகம் மாநில செயலாளர் சுகைல் ரகுமான், கல்வி பிரிவு மாநில தலைவர் ஸ்ரீதர் மற்றும் இசை கலைஞர்கள் கூறியதாவது:-

கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் 350 பேர் பரம்பரை பரம்பரையாக கிராமிய இசை தொழில் செய்து வருகிறோம். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஒரு பொது நிகழ்வும் நடைபெறாத காரணத்தால், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் வீட்டில் இருந்து தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு கருணை கூர்ந்து, மற்ற தொழில்களுக்கு விதிமுறைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுவது போல், எங்களுக்கும் விதிமுறைகளுடன் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டுகிறோம்.

மேலும் நாங்கள் அனைவரும் போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம். எனவே அரசின் நிவாரண உதவிகள் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு அரசு மூலம் நேரடியாக நிவாரண உதவி வழங்கி உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story