முந்திரி தோப்பில் கல்லூரி ஊழியர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று நாடகமாடிய காதல் மனைவி


முந்திரி தோப்பில் கல்லூரி ஊழியர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று நாடகமாடிய காதல் மனைவி
x
தினத்தந்தி 13 May 2020 11:06 PM GMT (Updated: 13 May 2020 11:06 PM GMT)

விருத்தாசலம் அருகே முந்திரித்தோப்பில் கல்லூரி ஊழியர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொன்று நாடகமாடிய காதல் மனைவி 9 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்.

கம்மாபுரம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த ஊ.மங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொன்று எரித்தது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், 9 மாதங்களுக்கு பிறகு தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வாக்குமூலம்

அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சுதா (வயது 34) என்பவர் தனது கணவர் ஸ்ரீதரனை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மேற்கிருப்பில் உள்ள முந்திரித்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்தது தனது கணவர் ஸ்ரீதரன் என்றும், கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டதால் அவரை கொன்று எரித்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த ஞானகுரு மகன் சிவராஜ்(23) ஆகியோரை கைதுசெய்தனர்.

இதையடுத்து சுதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்காதல்

நானும் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன்(39) என்பவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மோகன்(13), பரணி(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன், பெரம்பலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள பஸ்களுக்கு பொறுப்பாளராக இருந்து வந்தார். இதற்காக அவர் கல்லூரியிலேயே தங்கியிருந்து விட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு வந்து செல்வார்.

அவ்வாறு வீட்டுக்கு வரும் போது ராமாபுரத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரை உதவிக்காக ஸ்ரீதரன் அவ்வப்போது அழைத்து வருவார். அப்போது சிவராஜிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

வாக்குவாதம்

ஸ்ரீதரன் வேலைக்காக பெரம்பலூர் சென்றதும், நானும் சிவராஜியும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தோம். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர், எனது கணவரிடம் கூறியுள்ளனர். ஆனால் என் மீது இருந்த நம்பிக்கையில் அவர் அதை நம்பவில்லை. இந்நிலையில் கடந்த 11.7.2019 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஸ்ரீதரன், பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்து விட்டார்.

அப்போது நானும் சிவராஜியும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை ஸ்ரீதரன் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு

இதில் ஆத்திரமடைந்த நான், சிவராஜியுடன் சேர்ந்து ஸ்ரீதரனை அடித்துக் கொன்றேன். பின்பு ஒரு நாள் முழுவதும் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்து, 11.7.2019 அன்று இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை தூக்கி சென்று, மேற்கு இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தோம். பின்னர் எங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து விட்டோம். இதையடுத்து என் மீது யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக கடந்த 22.7.2019 அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது கணவரை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என புகார் கொடுத்தேன்.

9 மாதத்துக்கு மேல் ஆகி விட்டதால் நாங்கள் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

கள்ளக்காதலனுடன் இருந்ததை பார்த்து விட்டதால் காதல் கணவரையே மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story