ஊரடங்கால் குஜராத்தில் சிக்கி தவிக்கும் கள்ளக்குறிச்சி தொழிலாளர்கள்


ஊரடங்கால் குஜராத்தில் சிக்கி தவிக்கும் கள்ளக்குறிச்சி தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 May 2020 2:33 AM GMT (Updated: 16 May 2020 2:33 AM GMT)

ஊரடங்கால் குஜராத்தில் சிக்கி தவிக்கும் கள்ளக்குறிச்சி தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என்று கண்ணீருடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களது குடும்பத்துடன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது வீடியோ பதிவு ஒன்றை, வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில் கைக்குழந்தைகளுடன் தொழிலாளர்கள் கண்ணீருடன் பேசுகிறார்கள்.

அதில் ஒருவர் பேசியதாவது:-

சொந்த ஊரில் சேர்த்துவிடுங்கள்

நாங்கள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கட்டிட வேலை செய்வதற்காக வந்தோம். தற்போது கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் உள்ளோம். கையில் பணம் இல்லாததால் சமையல் செய்து சாப்பிட முடியவில்லை. குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஏதேனும் உதவி மற்றும் சாப்பாட்டுக்கு வெளியே சென்றால் எங்களை போலீசார் அடிக்கிறார்கள். எங்களுக்கு இதுவரை யாரும் உதவவில்லை. எங்களை போன்று இன்னும் பலர் இங்கு தவித்து வருகிறார்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சொந்த ஊருக்கு எங்களை அழைத்து செல்ல வேண்டும். எப்படியாவது எங்களை சொந்த ஊரில் சேர்த்துவிடுங்கள், குழந்தைகள் அனைவரும் பசியும், பட்டினியுமாக உள்ளனர் என்றார். அப்போது அனைவரும் இருகைகளையும் கூப்பி கண்ணீர் சிந்துகிறார்கள். வீடியோவில் உள்ள குழந்தைகளின் நிலையை நினைத்து பார்ப்பவர்களின் விழிகளிலும் கண்ணீர் வழிய செய்கிறது. இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story