அரசு துறைகள் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


அரசு துறைகள் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 May 2020 3:10 AM GMT (Updated: 16 May 2020 3:10 AM GMT)

அனைத்து அரசு துறைகளும் செலவினங்களை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். நடப்பு ஆண்டு திட்டமிடப்பட்ட சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்ற அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்து வரும் சேவைகளில் இருந்து வருமானத்தை திரட்டவேண்டும். இதுபற்றி அனைத்து துறைகளும் ஏற்கனவே எச்சரிக்கையாக உள்ளன.

கார் வாங்க மறுப்பு

ஜனாதிபதி மாளிகையை போல் புதுச்சேரி கவர்னர் மாளிகையும் அனைத்து செலவுகளிலும் கடுமையான கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றும். ஏற்கனவே சமூக பொறுப்புணர்வு நிதியை சமூக நிகழ்வுகளுக்கு செயல்படுத்துவதன் மூலம் நிதி செலவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி டெல்லி அலுவலகத்துக்கு புதிய கார் வாங்க மறுத்துவிட்டேன். கார் வாங்குவதை தொடர வேண்டாம் என்று கொரோனா சூழல் உருவாகும் முன்பே தெரிவித்து விட்டேன். ஜனாதிபதி நாட்டுக்கே சரியான முன்மாதிரியாக இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது பல சவால்களை கூட்டாக எதிர்கொள்ள உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story