அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமை செயலருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு


அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமை செயலருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2020 3:16 AM GMT (Updated: 16 May 2020 3:16 AM GMT)

புதுவை மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அரசுக்கு மதுபான விற்பனை, பத்திரப்பதிவு, விற்பனை வரி, சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவில் வருவாய் கிடைத்து வந்தது.

செவி சாய்க்கவில்லை

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வருவாய் அனைத்தும் முடங்கின. ஏற்கனவே ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு வகையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி அரசுக்கு கிடைக்கவில்லை.

கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கியதால், மாநில கையிருப்பு குறைந்துள்ளது. தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போதிய வருவாய் இன்றி புதுவை மாநில அரசு கடும் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. கொரோனா நிவாரண நிதி தருமாறு வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி எதுவும் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. இதனால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்டது

இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா குறித்து உலக சுகாதார மையம் தெரிவித்துள்ள கருத்து கணிப்புபடி கொரோனா தொற்றுநோய் மக்களோடு இருக்கும். மிக விரைவில் தீராது. எய்ட்ஸ் நோய் மக்களை விட்டு செல்லாதது. அதுபோல் கொரோனா வைரஸ் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும். மக்கள், கொரோனா தொற்றுநோயுடன் வாழ வேண்டுமென்று கூறியுள்ளனர்.

இருதயம், சிறுநீரக தொற்று, புற்றுநோய் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்தால் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது யாருக்கு வரும் யாருக்கு வராது? என்று சொல்ல முடியாது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ். இயற்கையாக வந்து இருந்தால் அதற்கு மருந்து கொடுத்து குணப்படுத்த முடியும். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த வைரசை விரட்ட சில ஆண்டுகள் ஆகும். ஆகவே கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் மக்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இதற்காக புதுவை மாநிலத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நிதிநிலை பாதிப்பு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமான பணியாளர்கள், சிறு கடை, நடைபாதை கடை வைத்திருப்பவர்கள், வீடு இல்லாதவர்களுக்கு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு வழி எதுவும் கூறவில்லை. அப்படி இருக்கும்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எப்படி மேலே வரமுடியும்.

புதுவை மாநில நிதி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மின்சாரத்திற்கான தொகையை வசூலிக்க காலக்கெடு வழங்க வேண்டும். மாநிலத்திற்கு மானியம் வழங்குமாறு கடிதம் எழுத உள்ளேன்.

அரசு ஊழியர் சம்பளம்

பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளனர். ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. பல மாநிலங்கள் இதுபோன்று நடவடிக்கை எடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றன. புதுவை மாநிலத்தில் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நானும் அரசு ஊழியர் சம்மேளன தலைவர்களை அழைத்துப்பேசி மே மாதம் சம்பளம் போடும் போது நம் மாநிலத்தின் நிதி பற்றாக்குறையை எந்த அளவுக்கு சரி செய்ய முடியும் என்று ஆலோசனை நடத்த உள்ளேன்.

நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த பின்னர் எனது சம்பள தொகையை பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் ரூ.45 ஆயிரம். அதில் 30 சதவீதம் தொகையை கொரோனா முடியும்வரை ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு கொடுக்க சபாநாயகருக்கு கடிதம் எழுத உள்ளேன். இதேபோல் புதுவை மாநிலத்தில் பலர் முன்வந்தால் அது மாநில வருவாயை பெருக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story