பாகூர் பகுதியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விரும்பவில்லை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்


பாகூர் பகுதியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விரும்பவில்லை போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 17 May 2020 3:06 AM GMT (Updated: 17 May 2020 3:06 AM GMT)

பாகூர் பகுதியில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல விரும்பவில்லை என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பாகூர்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், விவசாயம், கட்டுமானம், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பொருட்களின் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தனியார் கம்பெனிகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் புதுவையில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள் ஆய்வு

கிருமாம்பாக்கம், ஈச்சங்காடு பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில், வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கம்பெனிகளில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் ஆய்வு செய்து, தொழிலாளர்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிருமாம்பாக்கத்தில் உள்ள டீத்தூள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் அனுமதியை பெற்றதற்கான ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். மேலும், நோய் பாதிப்புள்ள பகுதியில் இருந்து யாராவது வேலை செய்கிறார்களா? என விசாரணை மேற்கொண்டு, வருகை பதிவேடுகளை பார்வையிட்டனர்.

சொந்த ஊர் செல்ல விரும்பவில்லை

இதனை தொடர்ந்து, ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், அங்கு பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களிடம் சொந்த ஊருக்கு செல்ல விருப்பங் களை கேட்டறிந்தார். ஆனால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. நாங்கள் இங்கேயே பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என்றனர்.

கொரோனா பாதிப்பு பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என பாதுகாப்பு விதிமுறைகளை அறிவுறுத்தி போலீசார் புறப்பட்டு சென்றனர். பாகூர் தாலுகாவில் உள்ள தனியார் கம்பெனிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 90 பேர் மட்டுமே நேற்று புதுவையில் இருந்து ரெயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். 

Next Story