திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்


திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
x
தினத்தந்தி 17 May 2020 4:22 AM GMT (Updated: 17 May 2020 4:22 AM GMT)

திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், திருப்பூருக்கு தினமும் பலர் வேலை தேடி வருகிறார்கள்.

தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். தற்போது திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 லட்சம். வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் 2 லட்சம். கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

பீகாருக்கு 3-வது கட்டம்

வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில் வசதி இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே இருந்தனர். இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினரிடம் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வடமாநில தொழிலாளர்கள் செல்போன் எண், ஆதார் எண் போன்றவற்றை கொடுத்து பதிவு செய்தனர்.

அதன்படி திருப்பூரில் இருந்து பீகாருக்கு ஏற்கனவே 2 சிறப்பு ரெயில் தொழிலாளர்களுடன் சென்றுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக சென்று வருகிறார்கள். இதற்கிடையே 3-வது கட்டமாக சிறப்பு ரெயில் நேற்று திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் முஜாப்பூர் நகர் வரை இயக்கப்பட்டது.

1,464 பேர் உற்சாகமாக...

இந்த ரெயில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. முன்னதாக இந்த தொழிலாளர்கள் அனைவரும் காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதுபோல் உணவு, தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்டு 1,464 தொழிலாளர்கள் உற்சாகமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை வரிசையாக பதிவு எண் அடிப்படையில் ரெயில் இருக்கைகளில் இருக்க ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர்.

இதுவரை திருப்பூரில் இருந்து 5 சிறப்பு ரெயில் வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது. இதில் பீகாருக்கு 3, உத்தரபிரதேசத்திற்கு 1, ஒடிசாவிற்கு 1 சிறப்பு ரெயில் என 5 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story