கல்வராயன் மலையில் சாராய ஊறல் அழிப்பு 3 பேர் கைது


கல்வராயன் மலையில் சாராய ஊறல் அழிப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2020 2:12 AM GMT (Updated: 18 May 2020 2:12 AM GMT)

கல்வராயன் மலையில் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். மேலும் சாராயத்தை விற்பனை செய்ய எடுத்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை உள்ளது. மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார், சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கல்வராயன்மலையில் தர்மபுரி மாவட்ட எல்லையோரத்தில் உள்ள கூடாரம் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள நீரோடை அருகே, ஒரு கும்பல் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதற்கென அங்கு சாராய ஊறல் அமைத்து இருந்தனர். இதையடுத்து போலீசார் 3 ஆயிரம் லிட்டர் சாராயத்தை அழித்தனர்.

3 பேர் கைது

இதற்கிடையே வேங்கோடு என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிளில் சாராயத்தை விற்பனைக்காக எடுத்து வந்த கூடராம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், செல்வராஜ், வேங்கோடு கிராமம் கோவிந்தராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 300 லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்ச பயன்படுத்து வதற்காக வைத்திருந்த 240 கிலோ வெல்லம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story