நாமக்கல் மாவட்டத்தில் மது, கள், சாராயம் விற்பனை செய்த 333 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் மது, கள், சாராயம் விற்பனை செய்த 333 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2020 3:31 AM GMT (Updated: 18 May 2020 3:31 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இதுவரை சட்டவிரோதமாக மதுபானம், கள், சாராயம் விற்பனை செய்த 333 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்தல், விற்பனை செய்ய வைத்திருத்தல், கள் விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 333 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 101 பேர் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் குற்றத்திற்காக மட்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். இந்த வழக்குகளில் 12 ஆயிரத்து 928 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

6,296 லிட்டர் ஊறல் அழிப்பு

மேலும் 516 லிட்டர் கள், 308 லிட்டர் சாராயம், 6,296 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டன. கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது தமிழக அரசால் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் இதுபோன்று சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதுமான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story