எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடக்கம்: வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடக்கம்: வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 May 2020 3:35 AM GMT (Updated: 18 May 2020 3:35 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இ-பாஸ் வழங்க வசதியாக வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கிடையே வினாத்தாள் கட்டு காப்பகத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் எனவும், ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 310 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் தேர்வு மையங்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 21 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.

கணக்கெடுக்கும் பணி

இந்த தேர்வை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி நடத்த இன்று (திங்கட் கிழமை) நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இங்குள்ள தனியார் பள்ளிகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். தற்போது அவர்கள் எந்த மாவட்டத்தில் தங்கி இருக்கிறார்கள் என்ற விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அவர்களை தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து பள்ளிகளில் தங்க வைத்து தேர்வு எழுத செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையே வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த காப்பகத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த அறை கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story