திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் 25 கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு


திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில்  25 கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 19 May 2020 12:02 AM GMT (Updated: 19 May 2020 12:02 AM GMT)

திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 25 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

திண்டுக்கல், 

கொரோனா தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் ஏ.சி. வசதி உள்ள நகைக்கடைகள், செல்போன் கடைகள், ஜவுளிக்கடைகள் போன்றவற்றை திறக்க அனுமதி இல்லை. இதற்கிடையே திண்டுக்கல் நகரில் ஏ.சி. வசதியுள்ள கடைகள் திறந்து இருப்பதாக புகார் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் வடக்கு போலீசார் நகர் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மெயின்ரோடு, சாலைரோடு, கடை வீதிகள், ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

25 கடைகளுக்கு ‘சீல்’

இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 மளிகை கடைகள், 3 ஜவுளிக்கடைகள் மற்றும் காலனி கடை, கடிகார கடை உள்பட 13 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் ஏ.சி. வசதியுள்ள கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், திண்டுக்கல் ஏ.எம்.சி. சாலையில் ஏ.சி. வசதியுள்ள 7 செல்போன் கடைகள் திறந்து இருந்தன.

மேலும் அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் செல்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதைத் தொடர்ந்து அந்த 7 செல்போன் கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதன்மூலம் நேற்று ஒரேநாளில் 20 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நிலக்கோட்டை மெயின் பஜார் பகுதியில் 5 நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அந்த கடைகளில் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகைக் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஏ.சி.யை பயன்படுத்துவதில்லை என தெரிவித்தனர். ஆனால் ஏ.சி. அமைக்கப்பட்டுள்ள கடைகளை அரசு திறக்க அனுமதி வழங்கவில்லை என்று 5 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story