இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 12:16 AM GMT (Updated: 20 May 2020 12:16 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தர்மபுரி,

ஊரடங்கால் வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி ரெயில் நிலைய சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சின்னராசு, கருப்பன், காவேரி கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள். பென்னாகரம் பஸ் நிலையம் அருகே மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் இண்டூர், அரூர், செம்மனஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. புலம் பெயர்ந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் ரெயில்கள் மற்றும் பஸ்களை இயக்க வேண்டும். ஊரடங்கால் வேலையிழந்து வாடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் பெற்ற வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, துணைத்தலைவர் சீனிவாஸ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் மாதையன், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி பாபு, நகர செயலாளர் நாகராஜ், மகளிர் அணி தலைவி சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் கொரோனா நிதியை உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், ஒன்றிய செயலாளர் சிவராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூதட்டியப்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரப்பா, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story