கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன முடி வெட்ட வந்தவர்கள் சமூக இடைவெளி யை கடைபிடித்தனர்


கோவை மாவட்டத்தில்   கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன   முடி வெட்ட வந்தவர்கள் சமூக இடைவெளி யை கடைபிடித்தனர்
x
தினத்தந்தி 20 May 2020 2:21 AM GMT (Updated: 20 May 2020 2:21 AM GMT)

கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு முடி வெட்ட வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

இடிகரை,

இந்தியாவில் கொரானா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சலூன் கடைகள் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சலூன் கடை தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் முடங்கியது. இதையடுத்து சலூன் கடைகளை திறக்க வேண்டும் என்று சவர தொழிலாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. அதன்படி கோவையில் உள்ள கிராமப்புறங்களில் சலூன் கடைகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகளைத் திறந்த உரிமையாளர்கள் கடை முழுவதும் கிருமி நாசினிகளை தெளித்தும், முகக்கவசம் அணிந்தும் முடி திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளில் கிருமி நாசினிகளை கொடுத்து கைகளை சுத்தப்படுத்தகின்றனர். இதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றி முடி திருத்தும் பணிகள் நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறந்து இருப்பதால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

துடியலூர்

கோவை குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை, தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம் கணுவாய், ஆனைக் கட்டி ஊராட்சி பகுதிகளில் கொரானா தடை உத்தரவால் மூடப்பட்டிருந்த அழகு நிலையங்கள், சலூன் கடைகள் நேற்று முதல் இயங்க தொடஙகியது. இதற்கிடையில் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்க உத்தரவிட்ட அரசுக்கு தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்ததோடு, நன்றி கூறி உள்ளார்கள்.

Next Story