கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 4:43 AM GMT (Updated: 20 May 2020 4:43 AM GMT)

கடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைப்பதை கைவிட வேண்டும். சிறு, குறு தொழிலுக்கான கடனில் 3 மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும். டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்ற மத்திய அரசை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெகரட்சகன், பொருளாளர் குமரன், நகர பொருளாளர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, துரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரேயும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story