விழுப்புரத்தில் இருந்து சேலத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் 125 பேர் பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பு


விழுப்புரத்தில் இருந்து சேலத்திற்கு வடமாநில தொழிலாளர்கள் 125 பேர் பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 21 May 2020 5:53 AM GMT (Updated: 21 May 2020 5:53 AM GMT)

விழுப்புரத்தில் இருந்து சேலத்திற்கு வடமாநிலதொழிலாளர்கள் 125 பேர் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து வருமானமில்லாமல் பசியும், பட்டினியுமாக கிடந்தனர்.

இவர்களை கணக்கெடுத்து அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் 36 பேரும், திருவெண்ணெய்நல்லூர் கீரிமேட்டில் 17 பேரும் ஆக மொத்தம் 53 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இவர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதோடு இவர்களுக்கு 3 வேளை உணவு, குடிதண்ணீர், முக கவசம், ரெயில் பயணச்சீட்டு ஆகியவையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் 53 பேரையும் நேற்று 2 அரசு பஸ்களில் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

இதேபோல் திண்டிவனத்தில் சப்-கலெக்டர் அனு, துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோர் 72 வடமாநில தொழிலாளர் களுக்கு ஆலோசனை வழங்கியபின் 2 அரசு பஸ் மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது தாசில்தார் ராஜசேகர், டாக்டர் விஜயலட்சுமி, மேற்பார்வையாளர் வீரப்பன், வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் உடனிருந்தனர். வடமாநில தொழிலாளர்களுடன் மண்டல துணை தாசில்தார்கள் வேலு, முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயபிரகாஷ், அருண்ராஜ் ஆகியோர் அரசு பஸ்களில் சேலம் சென்றனர்.

பின்னர் மாலையில் சேலத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த 125 தொழிலாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story