கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கிராமம்: டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து


கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கிராமம்: டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து
x
தினத்தந்தி 22 May 2020 11:50 PM GMT (Updated: 22 May 2020 11:50 PM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் கிராமம் மீண்டதையொட்டி அந்த கிராம மக்கள் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

குத்தாலம், 

கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் கிராமம் மீண்டதையொட்டி அந்த கிராம மக்கள் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை ஊராட்சியில் கடந்த மாதம் ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் அந்த பகுதியை வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திருப்பி உள்ளார்.

தொடர்ந்து 21 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் ‘சீல்’ வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் கிராமம் மீண்டதையொட்டி அந்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரியாணி விருந்து

கடந்த 21 நாட்களாக கிராமத்தில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்ட டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களை சமூக இடைவெளியில் அமர வைத்து அவர்கள் மீது மலர்களை தூவி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நோய் தொற்று நீங்கியதை கிராம மக்கள் கொண்டாடும் வகையில் டாக்டர்கள், நர்சுகள், போலீசார், வருவாய் துறையினருக்கு பிரியாணி விருந்து வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story