‘குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொன்றோம்’; கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்


‘குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொன்றோம்’; கைதான நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 May 2020 2:22 AM GMT (Updated: 23 May 2020 2:22 AM GMT)

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்றோம் என்று கைதான நண்பர்கள் 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேட்டூர், 

 மேட்டூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று காலை அங்குள்ள டான்சி குடியிருப்பு வளாகத்தில் ராஜா மர்ம நபர்களால் முகம் மற்றும் தலையில் கல்லால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் படுகொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கும், ராஜாவின் நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜாவை கொன்றதாக அவரது நண்பர்கள் மாதையன்குட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 29), விஜி (21), வல்லரசு (22), யுவராஜ் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-  

தொழிலாளி ராஜாவும், மூர்த்தி, வல்லரசு, யுவராஜ், விஜி ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் டான்சி குடியிருப்பு பகுதியில் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, விஜி, வல்லரசு, யுவராஜ் ஆகிய 4 பேரும் சேர்த்து அங்கு கிடந்த கல்லால் தாக்கி ராஜாவை கொன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Next Story