ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த 2 பேர் கைது


ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2020 6:02 AM GMT (Updated: 23 May 2020 6:02 AM GMT)

ஈரோடு அருகே ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

 ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி-மாவேலிபாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆலங்காடு புதுப்பாளையம் என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 18-ந்தேதி அன்று 5½ அடி நீளம் உள்ள கான்கிரீட் கல் வைக்கப்பட்டு இருந்தது. 

அப்போது அந்த வழியாக மெதுவாக வந்த சரக்கு ரெயில் அந்த கல்லில் மோதி நின்றது. இதைத்தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் குற்றவாளிகளை பிடிக்க கோவை ரெயில்வே கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை புதுப்பாளையம் பகுதியில் சுற்றித்திருந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பாரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு (வயது 27), பாரப்பட்டி பூசாரி நாயக்கர் தெருவை சேர்ந்த நாகலிங்கம் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் தண்டவாளத்தில் கான்கிரீட் கல்லை வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த போலீஸ் குழுவினரை ரெயில்வே காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) சைலேந்திரபாபு பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதியாக வழங்கினார்.

Next Story