கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம்


கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 25 May 2020 11:13 PM GMT (Updated: 25 May 2020 11:13 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டு குடிநீர் திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி மற்றும் கரம்பயம் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, தஞ்சை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 சிறிய கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகள் மற்றும் அதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு தாலுகாவில் உள்ள அணைக்குடி, வீரமாங்குடி, செம்மங்குடி ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணறுகளிலிருந்து நீர் பெறப்பட்டு, வீரமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள 21.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பொது நீர் சேகரிப்பு தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

தரைமட்ட தொட்டி

பின்னர் அங்கிருந்து சூரக்கோட்டை மற்றும் புதூர் பகுதிகளில் உள்ள தரைமட்ட தொட்டிகள் வழியாக கரம்பயம் பகுதியில் உள்ள நீரேற்று தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கரம்பயம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 604.52 கி.மீ. நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக 3 வழித்தடங்களில் கொண்டு செல்லப்பட்டு, 9 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 180 தரைமட்ட தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

180 தரைமட்ட தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர் 1049 கி.மீ. நீளமுள்ள நீரூட்டும் குழாய் மூலம் 1,153 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே பயனில் உள்ள 1,291 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறுகள், வீரமாங்குடியில் அமைந்துள்ள பொது நீர் சேகரிப்பு தொட்டி, கரம்பயம் பகுதியில் அமைந்துள்ள நீர் உந்து தொட்டி ஆகியவற்றை கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மின் எந்திரங்களை முறையாக பராமரித்திடவும், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

நீரேற்று நிலையங்கள், நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் நீர் செல்லும் பாதைகளை கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story