முழுகவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரம் திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்தனர்


முழுகவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரம்  திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்தனர்
x
தினத்தந்தி 26 May 2020 3:09 AM GMT (Updated: 26 May 2020 3:09 AM GMT)

முழு கவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரத்தை திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்து உள்ளனர்.

திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனா பாதித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் இவர்களை கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் முழுகவச ஆடைகள் பல பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆடை தயாரிப்பிற்கு பெயர் பெற்ற திருப்பூரில் பலரும் முழுகவச ஆடைகளை தயாரித்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூரில் எந்திரம் தயாரிப்பு

இந்தநிலையில் இந்த முழுகவச ஆடையில் தையல் இருக்கும் பகுதி வழியாக கொரோனா வைரஸ் ஊடுருவ வாய்ப்பு இருக்கும் என்பதால், அதனை தவிர்க்கும் வகையிலும், முழு கவச ஆடை முழு பாதுகாப்புடன் தயாரிக்கும் வகையில் திருப்பூர் தொழில்துறையினர் ஒரு எந்திரத்தை தயார் செய்துள்ளனர்.

இதன் தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாப்பீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி, எந்திரத்தை இயக்கி தொடங்கிவைத்து, பார்வையிட்டார். இதில் ஏ.இ.பி.சி. செயற்குழு உறுப்பினர் குமார் மற்றும் எந்திர தயாரிப்பாளர்கள் பிரேம், ஜெயபிரகாஷ், மணி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

100 சதவீத பாதுகாப்பு

இது குறித்து ஏ.இ.பி.சி. அகில இந்திய தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தற்போது கொரோனா பாதிப்பினால் முழுகவச ஆடைகளை தயாரிக்க தொடங்கியுள்ளார்கள். உலகம் முழுவதும் முழுகவச ஆடை தேவை அதிகமாக இருப்பதால், திருப்பூருக்கு ஆர்டர்கள் குவிய தொடங்கியுள்ளது. இருப்பினும் முழுகவச ஆடைகளில் உள்ள தையல் பகுதிகளில் இருக்கும் இடைவெளி வழியாக வைரஸ் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த ஆடைகளை அணியும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிலர் மற்றும் கோவையை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து “ஹீட் சீம் சீலிங் எந்திரத்தை” தயாரித்துள்ளன.

இந்த எந்திரம் மூலம் முழுகவச ஆடையில் தையல் வருகிற பகுதிகளுக்கு மேல் டேப் போன்று ஒட்டும் பணியை செய்ய இயலும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த முழுகவச ஆடை அணிகிறவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மிகவும் விலை குறைவாகவும், தரமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை தொழில்துறையினர் வாங்கி, மருத்துவ ஆடை தயாரிப்பில் கவனம் செலுத்தி வர்த்தகத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story