பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வக்கீல்; 6 பேர் கைது


பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வக்கீல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2020 4:33 AM GMT (Updated: 26 May 2020 4:33 AM GMT)

விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதுசம்பந்தமான வீடியோ வாட்ஸ்- அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியது.

விழுப்புரம்,

 தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆயுதத்துடன் ஒன்றுகூடியும், மற்ற நபர்களுக்கு கொரோனா நோய் பரவும் வகையிலும் பட்டா கத்தியை வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாடியிருப்பது குற்றம் என்பதால் அந்த வீடியோவை விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பதிவிறக்கம் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வரும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், கடந்த 8-ந் தேதி மாலை தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தெரியவந்தது.

இதையடுத்து வக்கீல் பிரபு, அவரது நண்பர்களான கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், முண்டியம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன், விழுப்புரம் வி.மருதூர் மோகன், ராஜேஷ், தக்கா தெருவை சேர்ந்த ஜமாலுதீன், பாண்டியன் நகரை சேர்ந்த பிரகதீஸ்வரன், முத்தோப்பு வினோத், விக்கி உள்பட 12 பேர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஆனந்த் (வயது 31), மோகன்(25), பிரகதீஸ்வரன்(25), பார்த்திபன்(28), ராஜேஷ்(25), ஜமாலுதீன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர். மற்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story