மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்: தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்: தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 28 May 2020 12:47 AM GMT (Updated: 28 May 2020 12:47 AM GMT)

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.


ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள நேரலகோட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 60). தொழிலாளர்கள். இவருடைய மகன் வெங்கடேசன் (30). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் அருகே உள்ள கவுதாளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது முத்தம்பட்டியை சேர்ந்த சின்னராஜ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை நோக்கி வந்தார்.

தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி தின்னூர் பஸ் நிறுத்தம் அருகில் இவர்கள் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்களை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் தந்தை, மகன் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story