செஞ்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு


செஞ்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 May 2020 4:35 AM GMT (Updated: 29 May 2020 4:35 AM GMT)

செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஊர் எல்லையிலும், குடியிருப்பு பகுதியின் மத்தியிலும் என 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.

செஞ்சி ,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த 2 கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவின் படி டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த கடை மூடப்பட்டது. ஊர் எல்லையில் உள்ள டாஸ்மாக் கடை மட்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர், குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்தனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் விரைந்து வந்து கடையை திறப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், இங்குள்ள டாஸ்மாக் கடையை திறந்தால் தகராறு ஏற்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பணியாளர்கள் டாஸ்மாக் கடையை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story