பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்


பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 29 May 2020 10:48 PM GMT (Updated: 29 May 2020 10:48 PM GMT)

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீட்டு கடன் பெற பொதுமக்கள் வங்கிகளை அணுகலாம் என திட்ட இயக்குனர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு நகர மற்றும் கிராம அமைப்பு துறை செயலரும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட இயக்குனருமான மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி பெற விரும்புவோர், பயனாளிகள் அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினரின் பெயரில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடு சொந்தமாக இருக்கக் கூடாது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டு கடன் கோரும் பயனாளிகளுக்கு 3 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய பொருளாதாரத்தில் பின்தங்கிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் 1 மற்றும் 2 பிரிவினரின், குடும்ப ஆண்டு வருமான வரம்பு முறையே ரூ.3 லட்சம் வரை, ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை, ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை மற்றும் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்க வேண்டும்.

வீட்டு கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டங்கள் குறித்த விவரங்களை http://tcpd.py.gov.in/pmayhousingforall, www.pmayuclap.gov.in என்ற இணையதளத்தில் கண்டறியலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய (இ.டபிள்யூ.எஸ்) மற்றும் குறைந்த வருமான பிரிவு (எல்.ஐ.ஜி.) பயனாளிகள் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி கடன் பெறலாம். நடுத்தர வருமான பிரிவு எம்.ஐ.ஜி. (1 மற்றும் 2) பயனாளிகள் கடன்பெற 2021 மார்ச் 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story