17 சிறப்பு ரெயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு


17 சிறப்பு ரெயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 30 May 2020 11:23 PM GMT (Updated: 30 May 2020 11:23 PM GMT)

பொன்னேரி தாலுகாவில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த 13,360 வெளிமாநில தொழிலாளர்களை 17 சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தனர்.

பொன்னேரி,

பொன்னேரி தாலுகாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருந்த இடங்களில் முடங்கி இருந்தனர். கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஆனால் அவர்களை அனுப்பி வைக்க தாமதம் ஏற்பட்டதால் பலர் சாலைகளில் நடந்து செல்ல ஆரம்பித்தனர். சிலர் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முறையிட்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில், பொன்னேரி போலீசார் உதவியுடன் வருவாய்த் துறையினர், வடமாநில தொழிலாளர்களை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் முன்னிலையில் மீஞ்சூர், பாடியநல்லூர் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த 13,360 பேர் அரசு பஸ்கள் மூலம் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 17 சிறப்பு ரெயில்கள் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Next Story