முகையூர் ஒன்றியத்தில் 2 ஏரியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்


முகையூர் ஒன்றியத்தில் 2 ஏரியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 3:05 AM GMT (Updated: 1 Jun 2020 3:05 AM GMT)

முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டமருதூர் கிராமத்தில் 442 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரி தூர்ந்துபோனதோடு, கரைகளும் சேதமடைந்து காணப்பட்டது.

திருக்கோவிலூர்,

மழைக்காலங்களில் இந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கோட்டமருதூர் ஏரியில் ரூ. 48 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் நடைபெற அரசு நிதி ஒதுக்கியது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஏரியில் நடைபெற்றது. இதில் டி.தேவனூர் கூட்டுறவு சங்க தலைவரும், மணம்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளருமான எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கே.என்.ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜோதி, கிளை செயலாளர்கள் கோவிந்தராஜ், சுப்பிரமணியன், பாசன சங்க தலைவர்கள் ரவி, முன்னாள் கவுன்சிலர் செல்லதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் குப்பன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், கோபிகிருஷ்ணன், விவசாய சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கிளை செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் கிளை செயலாளர் முகமது ஜின்னா நன்றி கூறினார். இதேபோல் ஆடுர்கொளப்பாக்கம் ஏரியில் ரூ.26 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகளை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Next Story