கோவை-காட்பாடி இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


கோவை-காட்பாடி இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2020 3:36 AM GMT (Updated: 2 Jun 2020 3:36 AM GMT)

கோவை-காட்பாடி இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

சூரமங்கலம்,

கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கியுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி, திருச்சி-நாகர்கோவில், மதுரை-விழுப்புரம் ஆகிய 4 சிறப்பு ரெயில்கள் மட்டும் தினமும் இயக்கப்படுகின்றன. அதன்படி கோவை-காட்பாடி இடையே நேற்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

இதையடுத்து கோவையில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு காலை 8.55 மணிக்கு வந்தது. பின்னர் அந்த ரெயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த 68 பேர் காட்பாடிக்கும், 5 பேர் ஜோலார்பேட்டைக்கும் என மொத்தம் 73 பேர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், பயணிகள் அனைவரும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று ரெயில்வே போலீசார் அறிவுறுத்தினர். இந்த சிறப்பு ரெயில் தினமும் கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு காலை 8.55 மணிக்கு வந்து காட்பாடிக்கு செல்லும். அதேசமயம் காட்பாடியில் இருந்து சேலத்துக்கு இரவு 7.20 மணிக்கு வரும் ரெயில், அதன்பிறகு கோவைக்கு புறப்பட்டு செல்லும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்கு முன்பதிவு செய்திருந்த கட்டணங்களை திரும்ப பெறுவதற்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 5 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது, ரத்து செய்யப்பட்ட ரெயிலுக்கான கட்டணங்களை முழுவதுமாக பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு கவுண்ட்டர்களில் ரெயில் டிக்கெட்டுகளை காண்பித்து டோக்கன்களை பெற்று அதற்கான பணத்தை திரும்ப பெறலாம். ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Next Story