திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2020 12:24 AM GMT (Updated: 3 Jun 2020 12:24 AM GMT)

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூர் ,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வாடகை வீட்டில் தங்கி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்த மதுரையை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே தொழிற்சாலை வேனில் அவருடன் சென்று வந்த புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இருவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 43 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 616 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் இறந்துள்ளனர். 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வ.உ.சி. தெருவில் வசிக்கும் 49 வயது ஆண், ஊரப்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் 25 வயது வாலிபர், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஆகிய 3 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

செம்மஞ்சேரி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது டிரைவர்கள் 2 பேர் உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இன்ஸ்பெக்டர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற இருவரும் கிண்டி ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,308 ஆனது. இவர்களில் 661 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 72 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துடன் பலி எண்ணிக்கை 12 ஆனது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆனது. இவர்களில் 254 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்தனர். 177 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story