தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா


தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 3 Jun 2020 11:00 PM GMT (Updated: 3 Jun 2020 7:50 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன்பெரியசாமி, கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போல்பேட்டை பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் 500 பேருக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், பெல்சி புளோரன்ஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், ஜனகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மெயின் ரோடு தமிழரசன் படிப்பகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நகர அவைத்தலைவர் முனியசாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில், கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து லாயல் மில் காலனியில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கோவில்பட்டி அருகே கடலையூரில் தி.மு.க. கிளை செயலாளர் முத்துகுமார் தலைமையில், கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு, முக கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்.

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 3 குழந்தைகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் வழங்கினார். மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு முக கவசம், இனிப்பு வழங்கினர்.

ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் உள்பட 125 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம் தபால் அலுவலகம் முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தி.மு.க. நகர செயலாளர் முத்து முகம்மது சார்பில் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. வீரபாண்டியன்பட்டினம் கருணாலயா இல்ல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஏரல் காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஏரல், சாயர்புரம் பகுதிகளைச் சேர்ந்த 100 சலவைத்தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. தங்க மோதிரங்களை வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் மற்றும் அனைத்து நோயாளிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மாவட்ட மாணவர் அணி மாடசாமி, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் உள்ள பதுவா முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கே.கைலாசபுரம் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் அய்யாத்துரை, அருண்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, யூனியன் கவுன்சிலர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story