மராட்டியத்தில் ஊரடங்கில்: கடைகள், சந்தைகள் இன்று திறப்பு - மும்பை, தானே, பால்கர், ராய்காட் இடையே மக்கள் சென்று வர அனுமதி


மராட்டியத்தில் ஊரடங்கில்: கடைகள், சந்தைகள் இன்று திறப்பு - மும்பை, தானே, பால்கர், ராய்காட் இடையே மக்கள் சென்று வர அனுமதி
x
தினத்தந்தி 5 Jun 2020 1:32 AM GMT (Updated: 5 Jun 2020 1:32 AM GMT)

மராட்டியத்தில் ஊரடங்கில் புதிய தளர்வாக கடைகள், சந்தைகள் இன்று திறக்கப்படுகின்றன. மேலும் மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் 5-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கில் ‘மிஷன் பிகின் அகெய்ன்’ என்ற பெயரில் மாநிலத்தில் புதிதாக செய்யப்படும் தளர்வுகளை கடந்த 30-ந் தேதி மராட்டிய அரசு அறிவித்தது. 3 கட்டமாக அமல்படுத்தும் வகையில் இந்த தளர்வுகள் வெளியாகின.
இந்த தளர்வுகள் மும்பை பெருநகர பகுதி, புனே போன்ற கொரோனா அதிக பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சிவப்பு மண்டலங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் (கன்டெயின்மெண்ட் சோன்) எந்த தளர்வுகளும் வழங்கப்படவில்லை. முதல் கட்ட தளர்வுகள் கடந்த 3-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 2-ம் கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செய்யப்பட்டு உள்ள தளர்வுகள் குறித்து நேற்று அரசு திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:-

மும்பை பெருநகர மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான மும்பை நகரம், மும்பை புறநகர் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த மண்டலத்திற்குட்பட்ட இடங்களுக்கு வாகனங்களில் சென்று வரலாம். பெருநகர எல்லையை தாண்டி செல்ல இயலாது.

மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும். மாநிலத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் திரும்பி செல்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத இடங்களில் வணிக வளாகங்கள் தவிர்த்து சந்தைகள், கடைகள் இன்று முதல் திறப்பதற்கு அரசு அனுமதிக்கப்படுகிறது.

இதன்படி சாலைகள், குறுக்கு தெருக்களில் ஒரு புறத்தில் உள்ள கடைகள் ஒருநாளும், மறுபக்கத்தில் உள்ள கடைகள் மறுநாளும் என ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்பட வேண்டும். அதாவது இன்று ஒரு பக்கத்தில் உள்ள கடைகள் திறந்து இருந்தால், மறுபக்கத்தில் உள்ள கடைகள் அடுத்த நாள் மூடியிருக்க வேண்டும்.

இதை கடைக்காரர்கள் கடைப்பிடிப்பதை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆட்டோ, டாக்சி மற்றும் வாடகை கார்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக டிரைவருடன் சேர்த்து 3 பேர் மட்டும் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.

வருகிற 7-ந் தேதி முதல் தனியார் அலுவலகங்களில் 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றலாம். மேலும் அன்று முதல் வாசகர்கள் செய்தித்தாள் வினியோகம் செய்பவர்களை வீட்டிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம். அப்போது செய்தித்தாள் வினியோகம் செய்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்வதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள் கற்பித்தல் அல்லாத நோக்கங்களுக்காக செயல்படலாம். இதில் விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவுகளை அறிவித்தல் ஆகியவையும் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story