தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2020 1:52 AM GMT (Updated: 6 Jun 2020 1:52 AM GMT)

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள இலவச மின்சார ரத்து சட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி அரியகுளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரசார குழு செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் முனுசாமி, செல்வம், லட்சுமணன், வெங்கட்ராமன், சம்பத், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சோலைக்கொட்டாய், நல்லம்பள்ளி, சோமனஅள்ளி, வெள்ளிச்சந்தை, அண்ணாமலைஅள்ளி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெற்ற அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இலவச மின்சார சலுகையை பறிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்படும் மின்சார சீர்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story