ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்


ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 6 Jun 2020 6:06 AM GMT (Updated: 6 Jun 2020 6:06 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்தஊர் செல்வதற்காக காத்திருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களுக்கு ரெயிலில் இடம் இல்லாததால் பயணம் செய்ய முடியவில்லை.

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு தளர்வால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் என்று பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து வருகிறார்கள்.

அவர்களையும் ஒருங்கிணைந்து உரிய ரெயிலில் அதிகாரிகள் அனுப்பி வைக்கிறார்கள். அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலருக்கு சொந்த ஊர் திரும்புவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

நேற்று திருப்பூரில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் ஜார்கண்ட் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் ஈரோட்டில் இருந்து தொழிலாளர்களையும் ஏற்றிச்செல்ல அதிகாரிகள் திட்டமிட்டனர். ரெயில் புறப்படுவதை முன்னிட்டு தொழிலாளர்கள் நேற்று ஈரோடு வந்தனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் பெயர் பட்டியல், முகவரி ஆகியவற்றை தாசில்தார் அ.பரிமளாதேவி தலைமையிலான அதிகாரிகள் சரிபார்த்தனர்.

மொத்தம் 165 தொழிலாளர்கள் ஜார்கண்ட் செல்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால், திருப்பூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் இடம் இல்லாத காரணத்தால் நேற்று ஈரோடு தொழிலாளர்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு பயணம் செய்ய முடியவில்லை. அதைத்தொடர்ந்து அடுத்த ரெயில் அறிவிக்கும்வரை தொழிலாளர்கள் காத்திருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் அவர்கள் தங்கி இருந்த பகுதிக்கு திரும்பி சென்றனர்.

Next Story