வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு


வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 4:42 AM GMT (Updated: 8 Jun 2020 4:42 AM GMT)

வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி கடைவீதியில் உடலில் ரத்த காயத்துடன் 20 வயதான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் கடந்த 1-ந்தேதி நடந்து வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த பெண்ணை தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 49), இவரது மனைவி ராஜம்(49) உள்பட 5 பேர் வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், சொந்த ஊருக்கு செல்ல அந்த பெண் விரும்பியதால் 5 பேரும் அந்த பெண்ணை காரில் அழைத்துச்சென்று தாக்கி கீழே தள்ளி விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம், தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்த சஸ்பெண்டு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர்(62), தண்டாங்கோரை அருகே வெளியாத்துரை சேர்ந்த ராமச்சந்திரன்(40), புதுக்கோட்டை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த பழனிவேல்(51) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை போலீசார் தஞ்சையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி கைது செய்யப்பட்டவர்களை வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 5 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் செந்தில்குமார், பிரபாகர், ராமசந்திரன், பழனிவேல் ஆகியோரை கும்பகோணம் சிறையிலும், செந்தில்குமாரின் மனைவி ராஜத்தை திருச்சி பாலக்கரையில் உள்ள பெண்கள் தனி சிறையிலும் நேற்று அதிகாலை போலீசார் அடைத்தனர்.

இந்த கும்பலுடன் தஞ்சை, திருப்பூர், கோவை மற்றும் பல ஊர்களை சேர்ந்தவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். தஞ்சை உள்பட பல மாவட்டங்களில் இருந்து இந்த கும்பலுடன் புரோக்கராக செயல்பட்ட பலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story