கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது


கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2020 5:44 AM GMT (Updated: 8 Jun 2020 5:44 AM GMT)

கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடுக்கம்பாறை,

கணியம்பாடி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள், ஆடுகள் திருட்டு போனது. மேலும்ல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் மேல்வல்லம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி ஆகியோரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சப்தலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தியாகு (வயது 26), கணியம்பாடி பாரதியார் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற தனஞ்செயன் (26) ஆகியோர் மாடுகளை திருடிச் சென்றது தெரிந்தது.

அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தியாகு, சுரேஷ் ஆகியோர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பகல் நேரத்தில் சென்று மாடுகளை நோட்டமிட்டனர். பின்னர் இரவு நேரங்களில் மாடுகளை வேன் மூலம் திருடிச் சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இவர்கள் 2 பேரும் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை திருடி சென்று விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 பசுமாடுகள் மீட்கப்பட்டன.

இவர்களுக்கு மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story