இன்று முதல் இயக்கப்படுவதையொட்டி தனியார் பஸ்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் பணி


இன்று முதல் இயக்கப்படுவதையொட்டி தனியார் பஸ்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 10 Jun 2020 4:58 AM GMT (Updated: 10 Jun 2020 4:58 AM GMT)

இன்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி அந்த பஸ்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 5-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளதோடு சில தளர்வுகளையும் அறிவித்தது. அதன்படி நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படலாம் என அறிவித்தது.

அதன்படி அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்களும் கடந்த 1-ந் தேதி முதல் இயக்கப்படலாம் என்று அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தனியார் பஸ்களை அதன் உரிமையாளர்கள் இயக்கவில்லை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் தனியார் பஸ்களை இயக்குவது என்று பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஒன்றுகூடி முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளைப்போல் தனியார் பஸ்களிலும் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதன்படியே தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 2½ மாதங்களுக்கு பிறகு தனியார் பஸ் போக்குவரத்து இன்று தொடங்கப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை கிருமி நாசினி திரவத்தால் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதோடு பஸ்களின் என்ஜின்கள் பழுது பார்க்கப்பட்டு டயர்களில் காற்று நிரப்பப்பட்டு வருகிறது. அதுபோல் ஆயில் சர்வீஸ் பார்க்கப்பட்டு எந்தவித கோளாறும் இல்லாமல் பஸ்களை இயக்க புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டன.

Next Story