அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு:  விவசாயிகள், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 2:27 AM GMT (Updated: 11 Jun 2020 2:27 AM GMT)

அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜானகி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அஜய்கோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள், மாதர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட நகலை சாலையில் போட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதேபோல் பழனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள் செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி

சாணார்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் மூக்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட்டியார்சத்திரத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தயாளன் தலைமையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story