ஒரேநாளில் 12 பேருக்கு பாதிப்பு: கொரோனாவுக்கு புதுச்சேரி முதியவர் பலி

கொரோனாவுக்கு புதுச்சேரியை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார். தொற்றால் ஒரேநாளில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஒருமாதமாக வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று புதிதாக புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜ் நகர், நவசக்திநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தவிர மாகியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 88 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 பேர், ஜிப்மரில் 42 பேர், மாகியில் 4 பேர், சென்னையில் 2 பேர் என அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 ஆகும்.
இதற்கிடையே முத்தியால்பேட்டையை சேர்ந்த 83 வயது முதியவர் ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் பாதிப்புக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் ஒருவர் புதுச்சேரி பிராந்திய பகுதியான மாகியை சேர்ந்தவர். மற்ற 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கொரோனா தொற்றால் உயிரிழந்த விழுப்புரத்தை சேர்ந்தவரும், முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரும் அரசு மருத்துவமனையில் ஒரே வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே இவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 47 சுகாதார ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story