புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து தீப்பிடித்ததாக பரபரப்பு


புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து தீப்பிடித்ததாக பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2020 4:38 PM GMT (Updated: 13 Jun 2020 4:38 PM GMT)

புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து தீப்பிடித்ததாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்காமை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கண்மாய் ஏரியில் நேற்று விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் படத்துடன் தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்புனவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.

அப்போது அங்கு கருவேல மரங்கள், முட்புதர்கள் எரிந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் விமானம் பறந்து போனதாகவும், அது தான் வெடித்து விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறினர். சிலர் ஹெலிகாப்டர் பறந்து போனதாகவும், பலத்த சத்தம் ஏற்பட்ட பின் மறைந்ததாகவும் கூறினர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், “இன்று (அதாவது நேற்று) காலை 10 மணி அளவில் வெடிகுண்டு வெடித்ததை போல பலத்த சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தம் அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மேலும்பக்கத்து மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை எல்லை வரை அந்த சத்தம் கேட்டது என்றனர்.

தடயங்கள் இல்லை

இதற்கிடையே ஏரியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக காட்டுத்தீ போல தகவல் பரவியது. மேலும் சமூக வலைத்தளங்களில், விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததை போலவும், அதன் பாகங்கள் சேதமடைந்து கிடந்தது போன்ற படங்களும் வைரலாகின. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்ட போது அங்கு விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. எந்த உதிரிபாகங்களும் கிடைக்கவில்லை.

ஏரியில் முட்புதர்கள் எப்படி தீப்பிடித்தது என்பது தெரியவில்லை. அங்குள்ள பொதுமக்கள் விமானம் பறந்து சென்றதாகவும், குண்டு வெடித்ததாகவும் கூறியநிலையில், அதிகாரிகளோ ‘அப்படி ஒன்றும் இல்லை‘, என்றனர்.

கலெக்டர் எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் விபத்துக்குள்ளானதாக பரவிய வதந்தியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் இது பற்றி கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளானதாக பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது. இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் ஏரியை பார்வையிட்ட போது அங்கு காய்ந்த முட்புதர்கள் நிறைந்த பகுதி மட்டும் தீயில் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. மற்றபடி விமானத்திற்கான பாகங்களோ அல்லது விமானம் விழுந்ததற்கான தடயங்களோ அங்கு இல்லை” என்றார்.

Next Story