கரூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை


கரூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2020 9:01 PM GMT (Updated: 13 Jun 2020 9:01 PM GMT)

கரூர் அருகே பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் தனியார் கல்லூரி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்,

கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள ராயனூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஹரிபிரியா (வயது 25). இவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஹரிபிரியாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் ஹரிபிரியா தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஹரிபிரியாவின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹரிபிரியா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிபிரியா விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஹரிபிரியாவின் சகோதரர் ஜனார்த்தனன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து, ஹரிபிரியாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story