வேலூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம் - கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது பரிதாபம்


வேலூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம் - கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 14 Jun 2020 3:38 AM GMT (Updated: 14 Jun 2020 3:38 AM GMT)

வேலூரில் கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

வேலூர்,

வேலூர் சார்ப்பனாமேடு தேவராஜ்நகரை சேர்ந்த அசேன் மகன் ரிஸ்வான் (வயது 19), கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கடையின் மேல்மாடியில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணியில் ரிஸ்வான் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கட்டுமான பணி நடந்தது. அப்போது ரிஸ்வான் இரும்பு குழாய் ஒன்றை கடையின் படிக்கட்டு வழியாக மேல்மாடிக்கு தூக்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்புகுழாய் கட்டிடத்தின் அருகே சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து ரிஸ்வான் தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஆசிக் (19) என்பவரும் படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட சகதொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ரிஸ்வான், ஆசிக் ஆகியோரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரிஸ்வானை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஆசிக்கிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அசேன் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story