எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்


எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்
x
தினத்தந்தி 14 Jun 2020 8:29 AM GMT (Updated: 14 Jun 2020 8:29 AM GMT)

எடப்பாடி அருகே காரை நிறுத்தி சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.

சேலம், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ளார். கடந்த 11-ந் தேதி சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் மேட்டூரில் இருந்து எடப்பாடிக்கு புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியை வழங்கினார். அதைத்தொடர்ந்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி, அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவருக்கு அரசு வேலை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு எடப்பாடியில் இருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு முதல்-அமைச்சர் வந்து கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கன்னந்தேரி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் தகவலை அறிந்த அப்பகுதி பெண்கள் அங்கு சாலையோரத்தில் கூடினர். பிறகு வரும் வழியில் அவர்களை கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை நிறுத்த சொல்லி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பெண்கள் கூறும்போது, இந்த பகுதியில் தொழிலாளர்களுக்கான கொரோனா நிவாரணம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து பெண்களிடம் பொறுமையாக குறைகளை கேட்ட முதல்-அமைச்சர், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்பாக மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தினார்.

சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்களிடம், முதல்-அமைச்சர், தனது காரை நிறுத்தி குறைகளை கேட்ட வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வைரலாகி வருகிறது.


Next Story