பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் கொரோனா நிவாரண நிதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு


பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் கொரோனா நிவாரண நிதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 15 Jun 2020 8:37 PM GMT (Updated: 15 Jun 2020 8:37 PM GMT)

கொரோனா நிவாரண நிதி கேட்டு பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு போட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு போடும்பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டனர். அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவலின் தடுப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில் வழக்கம் போல் சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும். அரசின் சார்பில் கொரோனா ஊரடங்கின்போது இடைக் கால நிவாரணமாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மாத தவணை கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என தனியார் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். ஒளிப்பட நிலையங்களின் கடை மற்றும் வீட்டுவாடகையையும், மின் கட்டணத்தையும் தள்ளுபடி செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ரூ.50 தரை வாடகை

இதேபோல் பாடாலூர் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனுப்பெட்டியில் போட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் வாழ்வாதாரத்திற்காக பூ, பழங்கள், காய்கள், வடை, பஜ்ஜி, மீன் போன்ற வியாபாரங்களை செய்து அதில் இருந்து வரும் வருவாயைக் கொண்டு நாங்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றோம். இந்த நிலையில் பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் சாலையோர தரை கடை வியாபாரிகளிடம் தினமும் ரூ.50 தரை வாடகை தரவேண்டும் என கூறி வசூல் செய்து வருகின்றனர். பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தி தரை வாடகை கேட்டு வசூல் செய்வதை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story