செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆனது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரம் ஆனது
x
தினத்தந்தி 16 Jun 2020 1:57 AM GMT (Updated: 16 Jun 2020 1:57 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 31 வயது இளம்பெண், 10 வயது சிறுவன், பேரமனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் நேதாஜி தெருவில் வசிக்கும் 24 வயது வாலிபர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் மாதா கோவில் தெருவில் வசிக்கும் 24 வயது வாலிபர், நல்லம்பாக்கம் காந்தி நகரில் வசிக்கும் 42 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 5 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,288 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர், 62 வயது மூதாட்டி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய 3 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள பூந்தண்டலம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த 35 வாலிபர், 33 வயது வாலிபர், 85 வயது முதியவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 751 ஆனது. இவர்களில் 427 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 317 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,922 ஆனது. இவர்களில் 881 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,014 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் உயிரிழந்தனர்.

Next Story