பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Jun 2020 9:45 PM GMT (Updated: 18 Jun 2020 4:10 AM GMT)

வில்லியனூரில் பெண் டாக்டரிடம் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வில்லியனூர், 

வில்லியனூர் அன்னை நகரை சேர்ந்தவர் 30 வயது பெண் டாக்டர். இவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். வில்லியனூர் எஸ்.எம்.வி.புரத்தை சேர்ந்தவர் பிரேமராஜா. இவரும் டாக்டர் ஆவார். ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது பெண் டாக்டரின் பெற்றோர், வரதட்சணையாக 100 பவுன் நகைகள், 7½ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் சீர்வரிசை பொருட்களை சீதனமாக கொடுத்தனர்.

இந்தநிலையில் பிரேமராஜா, தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு பெண் டாக்டர் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் பிரேமராஜா மற்றும் அவரது பெற்றோர் ராமலிங்கம், பிரேமாவதி ஆகியோர் கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், தாக்கியதில் கர்ப்பமாக இருந்த பெண் டாக்டரின் கரு கலைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் பெண் டாக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் டாக்டர் பிரேமராஜா, அவரது தந்தை பரமசிவம், தாய் பிரேமாவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story