தஞ்சை அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2020 3:07 AM GMT (Updated: 23 Jun 2020 3:07 AM GMT)

தஞ்சை அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளியை அடுத்த திருச்செனம்பூண்டி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி கடந்த சில நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்செனம்பூண்டி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நேற்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்சியினர்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார் தலைமை தாங்கினார். இதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், பூதலூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், திருச்செனம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வடிவழகன், பூதலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பூதலூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் அனைத்து கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தடை விதிக்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது, 20 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதுடன், விவசாயத்திற்கு மிகுந்த ஆதாரமாகவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் காரணமாக திகழும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆற்றுக்குள் மணல் குவாரி அமைக்கப்படுவதால் கடைமடை பகுதி வரையில் தண்ணீர் சரியான நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மணல் குவாரிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும். சமூக இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டதாகவும் கூறி தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி உள்பட 110 ஆண்கள், 90 பெண்கள் ஆக மொத்தம் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story