3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடக்கம்


3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2020 3:31 AM GMT (Updated: 23 Jun 2020 3:31 AM GMT)

3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. இதையொட்டி கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி கடந்த 3 மாதங்களுக்கு மேல் கோர்ட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதில், குறிப்பாக ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகள் மட்டும் சமூக இடைவெளியுடன் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மிக அவசர வழக்கு என்றால் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடத்தப்படுகிறது.

ஆனால் முழு அளவில் விசாரணை நடக்காததால் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 15 மாவட்டங்களில் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து நீதிமன்றங்களை திறக்க சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மீண்டும் வழக்கு விசாரணை

இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக சேலம், வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் நேற்று முதல் கோர்ட்டுகளில் மீண்டும் வழக்குகளை விசாரிப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதன்படி வழக்கு முடியும் தருவாயில் இருக்கும் வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒரு நீதிமன்றத்திற்கு 5 வழக்குகள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரு நீதிபதி உள்பட 5 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் இருப்பார்கள். முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு சேலம் கோர்ட்டில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

பரிசோதனை

முன்னதாக கோர்ட்டு வளாகத்திற்குள் வந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கோர்ட்டிலும் சமூக இடைவெளியை பின்பற்றி வழக்கு விசாரணை நடைபெற்றது.

Next Story